Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மின்வெட்டினால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி

ஏப்ரல் 25, 2024 05:39

புதுக்கோட்டை, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் ஆற்றுப்பாசனம் இல்லாத காரணத்தினால் மின் மோட்டார் மூலமாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் குறைவான மின்னழுத்தம் நிலவியதால் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு துவங்கியது. 
புதிய மின்மாற்றி அமைக்கும் பணியானது நத்தை வேகத்தில் நடைபெற்று வருவதால் குழிபிறை ஊராட்சியில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் கடந்த நான்கு நாட்களாக தொடர் மின்வெட்டினால் அவதிப்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி அடைந்தனர். 
இதனால் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் கருகியது. மேலும் பயிர் நடுவதற்காக அமைக்கப்பட்ட நாற்றங்காலில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக  நடவு செய்யும் பணி முடங்கியுள்ளது‌. இதனால் கோபமடைந்த விவசாயிகள் குழிபிறையில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை விட்டனர். விரைவில் மின்சாரம் சரி செய்யப்படாவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்